Thursday 25 December 2014

சிறந்து பிறந்த செம்மல் நபி(ஸல்) !


சமுதாயத்தில் வீரியமான பேச்சுக்களால் மாற்றங்களை ஏற்படுத்திய தலைவர்கள் உண்டு. ஊருக்காகவும், பேருக்காகவும் உழைத்த தலைவர்கள் நிறைய உண்டு. ஏன் இலச்சத்திற்கும் மேற்பட்ட நபிமார்கள் உண்டு. இவர்களில் எவருமே பிறக்கும்போதே சிறப்போடு பிறக்கவில்லை.  எவருடைய பிறப்பும் எதிர்பார்க்கப்படவும் இல்லை.  இவர் பிறப்பாரென்று நாங்கள் எதிர்பார்த்தோம் என்று சொள்ளப்படுமளவு எந்த தலைவர்களும் பிறக்கவுமில்லை. பிறக்காத எந்த தலைவரின் பெயரும் இதுவரை யாருக்கும் பெயராக வைக்கப்படவும் இல்லை.
ஆனால், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மட்டும் பிறக்கும்போதே சிறப்போடு பிறந்தார்கள். இந்த நபி எப்போது வருவார் என்ற எதிபார்ப்புகளோடு பிறந்தார்கள், கடைசி நபி எங்கள் குடும்பத்தில் வரவேண்டுமென்று, நபி வருவதற்கு முன்னாலேயே முஹம்மது நபியின் பெயரை தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டி மகிழ்ந்தார்கள்.
எதிர்பார்ப்பு 1:  
                           و إذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب و حكمة ثم جآءكم ..........الخ    
ஆன்ம உலகில் நபிமார்களின் ஆன்மாக்களை ஒன்றுகூட்டி உங்களுக்கு பிறகு வரப்போகும் நபியை ஏற்று, அவருக்கு உதவியும் செய்யவேண்டும், என்ன செய்வீர்களா? என்று அல்லாஹ் கேட்டபோது, அந்த ரூஹுகளெல்லாம் கண்டிப்பாக அவரை ஏற்று, அவருக்கு உதவியும் செய்வோம் என்றார்கள்.(03:81)
இறுதி நபியை முதன்முதலாக நபிமார்கள் எதிர்பார்க்கிறார்கள்.

எதிபார்ப்பு 2:
                                 و إذ قال عيسي ابن مريم يا بني إسرائل إني رسول الله اليكم ..............الخ 
இஸ்ரவேலர்களே! நான் கொண்டுவந்த வேதத்தையும், என் தூதுவத்தையும் உண்மைபடுத்தும் ஒரு இறைத்தூதர் அஹ்மத் என்ற பெயரில் வரவிருக்கிறார்(61:06) என்ற சுபச்செய்தியை ஈஸா நபி தன் சமூகத்திற்கு சொன்னதின் உள்ளர்த்தம், இறுதி நபியை மக்களும் எதிபார்க்கிறார்கள்.
எதிர்பார்ப்பு 3: 
                       ربنا و ابعث فيهم رسولا منهم يتلوا عليهم ........إلخ
எங்கள் இறைவனே! உன்னுடைய வேதத்தை ஓதிக் காண்பித்து, ஞானத்தை கற்றுத்தரும் ஒரு தூதுவரை வெளிக்கொண்டுவா. என்று இப்ராஹீம் நபி துஆ செய்கிறார்கள். ‘’ஒரு தூதுவரை’’ என்பது நபி (ஸல்) அவர்களையே குறிக்கும். எனவேதான் பின்னொரு காலத்தில் நபியவர்கள், انا دعوة أبي إبراهيم و بشري عيسي و رؤيا امي   நான் இப்ராஹிமின் துஆவாக இருக்கிறேன் என்றார்கள். நபியின் வருகையை இந்த சமூகத்தின் தந்தையான இப்ராஹீம் நபியே எதிர்பார்த்தார்கள்.
எதிர்பார்ப்பு 4: நபி பிறப்பதற்கு 800 ஆண்டுகளுக்கு முன்னாள்,
 أسعد الحميدي   என்ற அரசன் பல்வேறு நாடுகளை வெற்றி கொண்டு, மக்கா, மதினாவிற்கும் யுத்தம் நாடி வருகிறான். இவ்விரு பூமியின் புனிதத்தையும், இறுதி நபியின் வருகையையும், அவரின் வாழ்விடம் மதினா என்பதையும் அறிந்த மன்னன் யுத்தத்தை கைவிட்டு தன் தாயகம் திரும்பும் வேளை, நாயகம் வந்தால் இதைக் கொடுங்கள் என்று ஒரு கடிதத்தையும் கொடுத்துவிட்டு சென்றார். ஆனால்,ஆயுள் வரை, ‘நபியை’ காணும் பாக்கியம் பெறவில்லை. பின்னொரு காலத்தில் நபியவர்கள், ஹிஜ்ரத் செய்து மதினா வந்தபோது அந்தக் கடிதம் நபியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தக் கடிதத்தில்,
                شهدت على احمد  انه رسول من  الله باري النسم           
               فلو مد عمري إلى عصره لكنت وزيرا له وبن عم     என்று எழுதப்பட்டிருந்தது.
நபியவர்கள்கூட ஒரு கட்டத்தில் இப்படி கூறினார்கள், لا تسبوأ الطبع أنه أسلم   என்றார்கள். ஆக முஹம்மது நபியின் வருகை ஒன்று மட்டும்தான் எதிபார்க்கப் பட்டது. இந்த எதிர்பாப்பு வேறெவருக்கும் இல்லை.
பரிசுத்தமான பாரம்பரியம்:
و تقلبك في الساجدين     என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். இந்த வசனத்திற்கு வாசகம் அமைக்கிற இமாம் ராஜி  அவர்கள், 
كان روحه من الساجدين إلى الساجدين   என்று பதிவு செய்கிறார்கள். நபியின் உயிர், வணக்கசாலிகளுக்குள்ளேயே மாறி மாறி வந்திருக்கிறது. நபியின் பரம்பரையில் ஆதம் (அலை) வரை, யாருமே சிலை வணங்கிகள் கிடையாது.
பிறப்புக்கு முன்; நபியின் தகப்பனாரை பார்க்கும்போதெல்லாம் மக்காவின் பெண்ணொருத்தி உங்களை நான் திருமணம் முடிக்க ஆசைப் படுகிறேன் என்பாள். அப்துல்லாஹ் எந்த பதிலும் சொல்லாமல் சென்றுவிடுவார்கள், எப்பொழுது ஆமினாவிற்கும் அப்துல்லாஹ்விற்கும் திருமணம் முடிந்ததோ அதன்பிறகு அப்துல்லாஹ்வைப் பார்த்தாலும் பேசாமல் ஒதுங்கிப் போக ஆரம்பித்தாள். அவளிடம் அப்துல்லாஹ் கேட்டார்கள். ஏன் இப்பொழுதெல்லாம் என்னிடம் பேசுவதில்லை, ஒதுங்கிப் போகிறாய் என்றபோது, அந்தப் பெண் கூறினாள், உங்கள் நெற்றியில் ஒரு ஒளியைப் பார்த்தேன், அந்த ஒளியை அடையவேண்டும் என்பதற்காக உங்களை திருமணம் முடிக்க நாடினேன். அதற்காகத்தான் உங்களைச் சுற்றி சுற்றி வந்தேன், இப்போது அந்த ஒளி உங்களிடமிருந்து போய்விட்டது என்றாள்.
அப்துல்லாஹ், மக்காவில் அழகானவர், ஆமினா அவ்வளவு அழகில்லை, திருமணத்திற்குப் பிறகு ஆமினா அழகுமிக்கவராகவும், அப்துல்லாஹ் அழகு குறைந்தவராகவும் காண ஆரம்பித்தனர், காரணம், அப்துல்லாஹ்வின் உடம்பில் மனித்துளிகளாக நபி இருந்தவரை அப்துல்லாஹ் அழகானவராக இருந்தார், எப்பொழுது நபியவர்கள், ஆமினாவின் கருவறை சென்று விட்டார்களோ அன்றிலிருந்து ஆமினா மெருகேற ஆரம்பித்தார்கள்.

  கி.பி. 570 ரபீஉல் அவ்வல் பிறை 12 திங்கள் கிழமை இந்த அவனியை அலங்கரிக்க அண்ணல் நபி பிறந்தார்கள்.
عثمان بن أبي العاص، عبدالرحمن بن عوف  இவ்விருவரின் தாய்மார்களும் ஆமினா அம்மையாரோடு பிரசவ நேரத்தில் உடனிருந்தவர்கள்.  عبدالرحمن بن عوف ன் தாயார் ஷஃபா அவர்கள் கூறுகிறார்கள். நபியர்களை நான் கையில் வாங்கியதும் எங்கும் ஒளிவெள்ளம். நட்ச்சத்திரங்களெல்லாம் என்னை நெருங்கி வந்தன, என்மேல் விழுந்து விடுமோ என்று நான் பயந்தேன். என்கிறார்கள்.
ஆமினா கூறுகிறார்கள், நபி பிறக்கும் அந்த நேரத்தில் ஒரு அசரீரி அல்லது இல்ஹாம் போடப்பட்டது.
إنك قد حملت بسيد هذه الأمة فإذا وقع إلي الارض فقولي اعيده بالواحد من شر كل حاسد فاذا وقع بسميه محمدا              
மேலும் ஆமினா கூறினார்கள். يطوف به من مشرق إلى المغرب والبحار  என்று சப்தம் கேட்டது. என் பிள்ளையை சில வினாடிகள் காணவில்லை. என்கிறார்கள்.
அதன்பிறகு கஃபாவில் இருந்த அப்துல் முத்தலிபுக்கு செய்தி சொன்னபோது, விரைந்து வந்த அப்துல் முத்தலிப் குழந்தயை தூக்கிக் கொண்டு பைத்துல்லாஹ்வை தவாஃப் செய்துவிட்டு வெளியே வந்து முஹம்மத் என்று பெயரும் வைத்தார். சுற்றிலும் இருந்தவர்கள், என்ன முத்தலிப் அவர்களே! இந்தப் பெயர் உங்கள் குடும்பத்தில் யாருக்குமே வைக்கப் படவில்லையே! ஏன் இந்தப் பெயரை வைத்தீர்கள் என்று கேட்டபோது,
      أردت أن يحمده الله في السماء وان يحمده الخلق في الأرض என்று கூறினார். எல்லா வகையிலும் சிறப்போடும் அதிசயங்களோடும் ஏந்தல் நபி அவதரித்த இம்மாதத்தை சிறப்புறச் செய்வோமாக!
WWW.alshirazi.com/compilations/.../3.htm  என்ற தலைப்பில் நபியின் பிறப்பு இன்னும் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.








  
                                             


Thursday 18 December 2014

அஹிம்சா வழி ( ல் ) ஆயுதம் தரிப்போம்!

 நீண்ட இடைவேளைக்குப் பிறகு, உங்களை சந்திக்கிறேன். என்னுடைய இணையதளம் என்ற இறுமாப்பை சக்திவாய்ந்த பல வெள்ளிமேடைகள் இடித்து தரைமட்டமாக்கி விட்டன. 
(அஜீஸ் பாகவி, சதக் மஸ்லஹி, பஷீர் உஸ்மானி, அப்பாஸ் ரியாஜி, வரஸத்துல் அன்பியா, உலமா.இன், உஸ்மானிகள் பேரவை, இவர்களின் வெள்ளிமேடைகள், இன்னும் நிறைய.) 
 நானும் பதிவிட வேண்டும் எனும் பந்தயத்தில் பலமுறை முயற்சித்தும் (பளுவின் காரணமாக) பின்தங்கி விட்டேன். வெள்ளிமேடைகளும் பெருகி விட்டன.  
எப்போதாவது வருவேன், ஏதேனும் ஒன்று தருவேன் வலைதள நண்பர்கள் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். 

புதிதாய் உருவாக்கி விட்ட ஆட்சிமுறை, இஸ்லாமியர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தப் பார்கிறது என்ற என் பயமே இந்த ஒலியாக்கம். 
                            


 இந்தியா முழுவதும் இஸ்லாமிய சமூகம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அடுக்கடுக்காக பல்வேறு இன்னல்களை ஒவ்வொரு நாளும் முஸ்லிம்கள் எதிர்கொள்கிறார்கள். இதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் என்ன?
1.       ஐவேளை தொழுகை
தொழுகையைக் கொண்டு உதவி தேடுமாறு இஸ்லாம் முஸ்லிம்களை வலியுறுத்துகிறது. அல்லாஹ்வோடு நேரடியாக பேச முடிந்த ஒரே வணக்கம் தொழுகை. அந்த தொழுகையை விட்டதன் விளைவு இறை உதவி இல்லாமல் போனது.

நபி (ஸல்) அவர்களின் கடைசி வஸிய்யத். الصلوة يا امتي الصلوة يا امتي என்பதுதானே. ஒரு தகப்பனின் கடைசி வஸிய்யத்தை நிறைவேற்றுவது பிள்ளைகளின் பொறுப்பல்லவா! இந்த சமூகம் அந்த வஸிய்யத்தின் அடையாளத்தை விட்டதின் விளைவு, நாடே அந்நியமாகி விட்டது.    

உமர் ரலி, தொழுகையின் நேரத்தில்தான் குத்தப்பட்டார்கள். 6 நாட்களாக சாப்பிட்டதெல்லாம் காயத்தின் வழியே வெளியானது. மயக்கம் மாறி மாறி வந்தபோதும் தொழுகையை பற்றியே கேட்டார்கள்.                                      لاحض في الإسلام لمن لا صلوة له   என்ற வார்த்தையின் சக்கரவர்த்தி உமர் தானே.

ஹுசைன் ரலி. 52 நபர்களோடு கர்பலாவில். லுஹர் நேரம் வந்தபோது யுத்தத்தை நிறுத்துமாறும் தொழுகை முடிந்து யுத்தம் தொடரலாம் என்றபோதும் எதிரிகள் மறுத்து விட்டார்கள். படையை இரண்டாக பிரித்து ஒரு பகுதியினர் தொழுகவும் அடுத்த பகுதியினர் யுத்தம் செய்யவும் கட்டளையிட்டார்கள். பிறகு தொழுதவர்கள் யுத்தம் செய்யவும் யுத்தம் செய்தவர்கள் தொழுகவும் பணித்தார்கள். தொழுகையின் வீரியம் என்னவென்பதை நாயகத்தோழர்கள் விளங்கினார்கள், அமல் செய்தார்கள். எனவே இந்தச் சமூகம் கையிலெடுக்கவேண்டிய முதல் ஆயுதம் தொழுகை.  
2.       
   பெரும் பாவங்களை விடுதல்:
வட்டி, திருட்டு, சூனியம் ஏன், பொய்யும் பெரும்பாவம்தானே! வீட்டுக்கு வருகிற கடன்காரன் முதற்கொண்டு கடைக்கு வருகிற வாடிக்கையாளர் வரை எல்லோரிடமும் பொய் பேசித்தானே தப்பிக்கிறோம். வாழ்க்கையில் பலதடவை பேசிய பொய்கள்; நமது வாழ்க்கையையே இந்த நாட்டில் பொய்யாக்கி விட்டது.
நபியே! நம்மில் நல்லவர்கள் உயிரோடு இருக்க இறைவன் புறத்தில் இருந்து வேதனைகள் இறங்குமா!? என்று ஆயிஷா (ரலி) கேட்டபோது, பாவங்கள் மிகைத்து விட்டால், நல்லவர்கள் இருந்தாலும் வேதனைகள் வரும் என்றார்கள் நபியவர்கள். ஆக இந்தச் சமூகம் கையிலெடுக்க வேண்டிய இரண்டாவது ஆயுதம் பெரும் பாவங்களை விடுதல்.

3.       பிறச் சமயத்தவரிடம் நன்முறையில் நடத்தல்:
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் போன்றே பிற சமயத்தவரிடமும்  ஒழுக்க மாண்புகளோடும், நன்னடத்தையுடனும்  நடந்து கொள்ள வேண்டும்.

மாமன், மச்சான் என்ற உறவுமுறைப் பேச்சுக்கள், மார்கத்தை விட்டு அவர்கள், விலகி நிற்கிறார்கள் என்பதைவிட, அவர்களால் முஸ்லிம்கள் தான் மார்க்கத்தை விட்டு தூரமாகி விட்டார்கள்.

சொந்த ஊரை விட்டு துரத்தப்பட்டு, சொந்தங்களை அண்டவிடாமல் துன்புருத்திய சமூகத்தை சந்திக்கும்போது வெறுப்பும், கோபமும் வருவது இயற்கையே! அந்த சூழலிலும் اليوم يوم الملحمة என்ற தம் தோழர்களிடம் 
اليوم يوم المرحمة  என்று சொல்லுங்கள் என்றார்கள் மாநபி (ஸல்) அவர்கள். இந்த அணுகுமுறைதான் மக்கா வெற்றியின்போது பலநபரை இஸ்லாத்தின்மீது நல்லெண்ணம் கொள்ளவைத்தது.

நபியின் பக்கத்து வீட்டிலிருந்த ஒரு யஹூதி. தினமும் குப்பைகளை நபியின் வீட்டிற்கு முன்னால் கொட்டுவது வழக்கம். அந்த குப்பைகளையெல்லாம் கோபப்படாமல் கூட்டி அப்புறப்படுத்துவது நபியின் பழக்கம். ஒருநாள் நபி, வீட்டிற்கு முன்னால் குப்பை இல்லாததைக் கண்டு  لعل جارنا اليهود  مريض  என்பதோடு நில்லாமல் அந்த யஹூதியின் வீட்டிற்கு சென்று நலமும் விசாரித்தார்கள், நற்குண நாதர் (ஸல்) அவர்கள். இந்த அணுகுமுறை அந்த யஹூதிக்கு இஸ்லாத்தைக் கொடுத்தது.

ஹசன் பசரி(ரஹ்) ஒருநாள் நோய்வாய்ப் பட்டிருந்தபோது அவர்களது பக்கத்துவீட்டு கிருத்துவ நண்பர் அன்னாரை நலம் விசாரிக்க வந்தபோது தன் வீட்டிலிருந்து வரும் கழிவுநீர் ஹசன் பசரியின் வீட்டிற்குள் வருவதும் அதைப் பாத்திரத்தில் பிடித்து அவரே வெளியில் ஊற்றுவதையும் பார்த்த கிருத்துவ நண்பர், ஹசன் பசரியே! என் வீட்டுக் கழிவுநீர் உங்கள் வீட்டிற்குள் வருகிறதே, என்னிடம் சொல்லக்கூடாதா?! எவ்வளவு நாளாக இப்படி நடக்கிறது என்றார். இருபது வருடமாக இப்படித்தான் செய்து வருகிறேன் என்றார்கள் ஹசன் பசரி. இந்த அணுகுமுறையால் அந்த கிறிஸ்த்துவர் இஸ்லாத்தை ஏற்றார்.
ஆக, இஸ்லாமிய சமூகம் கையிலெடுக்க வேண்டிய மூன்றாவது ஆயுதம் பிறச் சமயத்தவரிடம் நன்முறையில் நடத்தல்.
4.  
                 நமக்குள் ஒற்றுமை வேண்டும்:
எல்லோருடைய சுபாவமும் எல்லோருக்கும் ஒத்துப் போகாது. இது இயல்பு. சுபாவ மாறுபாடுகள்தான் நமக்குள் வேறுபாடுகளை ஏற்படுத்தி விடுகிறது. சின்னச்சின்ன பிரச்சனைகள், பெரியபெரிய விபரீதத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஏன், நபித்தோழர்களுக்குள் பிரச்சனைகள் இல்லையா? அவர்களெல்லாம், காலம் முழுதும் அடித்துக் கொண்டும், எதிரிகளாகவுமா வாழ்ந்தார்கள். கருத்துவேறுபாடுகள் கல்புக்குள் நுழையாமல் பார்த்துக் கொண்டார்கள்.

ஒருநாள் அபூபக்கருக்கும், உமருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. கோபப்பட்ட உமர் வேகமாக வீட்டிற்குப் போகிறார்கள். அபூபக்கரும் உமரிடம் மன்னிப்புகோர பின்னாலேயே போகிறார்கள். உமர் வேகமாக கதவை அடைக்க, மனமுடைந்து மஸ்ஜிதுன் நபவிக்கு வந்து விட்டார்கள் அபூபக்கர்(ரலி). அபூபக்கரிடம் நாம் இப்படி நடந்திருக்கக் கூடாது என்று வருத்தப்பட்ட  உமரும் அபூபக்கரைத் தேடி பள்ளிக்கு வந்தார்கள். இருவரும் தங்களது தவறை முன்மொழிந்து, ஒருவருக்கொருவர் மன்னிப்புக்குக் கேட்டு மல்லுக்கு நின்றார்கள்.
இதை மாநபி, மலர்ந்த முகத்தோடு பார்த்துக் கொண்டே ஒன்று சொன்னார்கள்; என்னை எல்லோரும் பொய்யனென்றபோது இந்த அபூபக்கர்தான் என்னை உண்மை படுத்தினார் என்றார்கள் உத்தம நபி.
வேறுபட்டக் கருத்துக்குள் பொறுத்துப் போகிற பக்குவம் வேண்டும்.

பிரச்சனைகளின் போது கையாள வேண்டிய காரியங்கள்:
   மன்னிக்கப் பழகனும்
மக்காவை விட்டு நபியவர்கள் விரட்ட பட்டபோது இரண்டு ரக்அத் தொழுக வேண்டி கஃபாவிற்குப் போனபோது  عثمان بن طلحة  எனும் கஃபாவின் பொறுப்புதாரி, நபியை உள்ளே விட மறுத்தபோது எனக்கொரு காலம் வரும் அப்போது பார்த்துக் கொள்கிறேன். என்று நபியவர்கள் கலங்கிய உள்ளத்தோடு சென்று விட்டார்கள். எட்டாண்டுக்குப் பிறகு மறுபடியும் ஃபாவிற்கு போனார்கள். அன்றைக்கு மக்காவே மாநபி வசம். (விரிவஞ்சி விடுகிறேன் நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள்.)    
 خذوها يا بني ابي طلحة خالدة تالدة لا ياخذها الا ظالم                                அபீ தல்ஹாவின் மகனே! நிரந்தரமாக உங்களிடமே இருக்கட்டும் இந்த சாவி! உங்களிடமிருந்து இதைப் பிடுங்குபவன் பாவி! என்றார்கள்.
என்றைக்கோ  நடந்து முடிந்த பிரச்சனைகளை தோண்டி எடுத்து பழி வாங்கும் மனிதர்களுக்கு தவறுகளை மன்னிக்க கற்றுக் கொடுத்தார்கள் காருண்ய நபி.

தவறுகளை  மறைக்கப் பழகனும்
என் மகள் நிறைய தவறு செய்து விட்டாள். தற்கொலைவரை போய்விட்டாள். இப்போது அவளை பெண் கேட்கிறார்கள். அவளது குறைகளையெல்லாம் மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லி விடவா? என்று உமர் (ரலி)யிடம் கேட்டபோது,
அவளது குறைகளை பிறரிடம் சொன்னால் உன்னை கடுமையாக தண்டிப்பேன். முஸ்லிமான, பத்தினியான பெண்ணை எப்படி மணம் முடித்துக்கொடுப்பாயோ அதைப் போன்றே இவளையும் மணம் முடித்துத் தர வேண்டும் என்றார்கள் உமர் (ரலி).

தவறுகளை மறக்கப் பழகனும்
சரித்திரத்தில் உமர் என்பவர் யார்?  உத்தம நபியின் உயிரெடுக்க வந்தவர்தானே! பலதடவை நபிக்கு யோசனை சொன்னபோதுகூட நீ யார் எனக்கு யோசனை சொல்வது, என்னையே கொள்ள வந்தவன்தானே நீ, என்று ஒருதடவை கூட நபி உமரைப் பார்த்து சொன்னதில்லையே!

நம்முடைய தவறுக்கு மன்னிப்பு கேட்க பழகனும்
  யுத்தகளத் தயாரிப்பில் நபி. சஹாபிகளின் வரிசையை சரிசெய்ய நபி ஈட்டியை பயன்படுத்தியபோது ஒரு நபித்தோழரின் வயிற்றில் பட்டுவிட நபியே! ஈட்டியால் எனக்கு நோவு தந்தீர்கள் என்றார். உடனே நபியும் பதிலுக்கு என்னை நோவினை செய்யுங்கள் என்றார்கள். நபியை கட்டியணைத்து முத்தம் கொடுத்த அந்த நபித்தோழர், நபியே! யுத்தம் போகப் போகிறேன்; நான் திரும்புவேனா? மாட்டேனா? தெரியாது. எனவே, உங்கள் மேனியை முத்தமிட ஆசை கொண்டேன் என்றார் நாயகத் தோழர். தவறு தன பக்கம் என்றபோது உடனே ஏற்றுக் கொண்டு தலைசாய்த்தார்களே அந்த நபியின் உம்மத்தா இன்று இந்த சுன்னத்தை மறந்து விட்டுத் தவிக்கிறது.?

மக்களை ஒன்று படுத்தனும்

பிரிவினைகள் மிகப்பெரிய கேடுகளை விளைவிக்கும். இறை உதவியை தடுத்துவிடும்.

பிரிவினைவாதியால் அல்லாஹ்வின் அருள் தடைபடும் என்பது நபிமொழி.
 யாரைப் பற்றியும் என்னிடம் குறை சொல்லாதீர்கள்; உங்களை நான் பரிசுத்தமாகவே பார்க்க விரும்புகிறேன் என்றார்கள் ஏந்தல் நபி.
ஆக இஸ்லாமிய சமூகம் கையிலெடுக்க வேண்டிய இந்தாவது ஆயுதம் நமக்குள் ஒற்றுமை

இன்டர்நெட்டில் வலம்வரும் இஞ்சினியர்கள் எல்லாம் இஸ்லாமிய தீவிரவாதிகளாய் சித்தரிக்கப் படும் நிலை மாறவேண்டுமானால், கட்டாய மதமாற்றமெனும் காவிகளின் காட்டுமிராண்டித்தனம் மாறவேண்டுமானால் மேற்சொன்ன இந் ஐந்தொழுக்கப் பயிற்சி முக்கியம்.

இந்த அஹிம்சாவழி ஆயுதங்கள்தான் இந்த நாட்டில் முஸ்லிகளை நிம்மதியாக வாழவைக்கும். அறவழிப் போரால் மட்டுமே இந்த சமூகத்தைக் காக்க முடியும்.

அல்லாஹ் அருள் புரியட்டும்!


 




   

Thursday 5 June 2014

கொடுத்து வாழ்வதில் கோடி இன்பம்!


அல்லாஹ் இந்த சமூகத்தை மிகச் சிறப்பாக வைத்திருக்கிறான். யாருக்கு எவ்வளவு என்பதையும் முடிவு செய்து விட்டான்.
ஆனால், உலக ஆசை, பொருள் சேர்ப்பதில் உள்ள ஆர்வம், நிலப் பேராசை என்று மனிதனின் அபிலாஷைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதனால் அசம்பாவிதங்கள் பெருகியும், தர்மச் சிந்தனைகள் குறைந்தும் வருகின்றன.
பத்து ரூபா நோட்டை தேய்த்துப் பார்த்து விட்டு, சில்லரை இல்லையென்று, யாசகம் கேட்டவனை ஏமாற்றிவிடுகிற நிலப் பிரபுகள் இன்னும் வாழத்தானே செய்கிறர்கள்.
பத்து ரூபாயைக் கொடுத்துவிட்டு, மீதம் ஒன்பது ரூபாயை பிச்சைக் காரனிடமிருந்து எதிர்பார்க்கிற பெரும் கோடீஸ்வரர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.
இவர்களுக்கு மத்தியில் பிறருக்கு உதவுவதற்காகவே, பைத்துல்மால்களும், வக்ஃபுகளும் ஏற்படுத்தப்பட்டன என்பது எவ்வளவு பெரிய தர்மச் சிந்தனை.
பைத்துல்மால்
அபூபக்கரின் காலத்தில், பைத்துல்மால் கட்டிடமிருந்தாலும், நடைமுறை படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை. அபூபக்கரின் மரணத்தருவாயில் பைத்துல்மாலின் சொத்து ஒரு திர்ஹம். (16.19ரூபாய்)
உமர் ரலியின் ஆட்சி காலத்தில் பஹ்ரைனின் ஆளுனராக அபூஹீரைராஹ் இருந்தார்கள். வருடத்திற்கு ஐந்து லட்சம் திர்ஹம் கொண்டு வருவார்கள். இவ்வளவையும் என்ன செய்வது என்ற ஆலோசனை செய்யப் பட்டபோது, அலி ரலியவர்கள், இருப்பில்லாமல் செலவழிக்க வேண்டும் என்றார்கள். வலீதிப்னு ஹிஷாம் என்பவர், சிரியா போன்ற பகுதிகளில் நிதித்துறை தனியாக செயல்படுவதைப் பார்த்திருக்கிறேன். நாமும் அப்படி செய்யலாமே என்ற யோசனையைச் சொன்னபோது, கலிஃபா அந்தக் கருத்தையே ஏற்றார்கள். பிறகுதான் பைத்துல்மால் நடைமுறைக்கு வந்தது. அப்துல்லாஹிப்னு அர்கம் ரலி “Finance minister” ஆகப் பொறுப்பேற்றார்கள். வருடத்திற்கு மூன்று கோடி திர்ஹம் இருப்பு இருந்தது. (485,700,000ரூபாய்)

ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டு. அப்பாஸிய ஆட்சி காலத்தில் பாக்தாத் நகரத்தின் கஜானா இருப்பு, ஒன்னே முக்கால் கோடி தீனார். ஒரு தீனாரென்பது, 4.25 கிராம் தங்கம். இன்றைய கணக்குப்படி குவைத் தீனார் 1க்கு 211.00 ரூபாய். (3,692,500,000 ரூபாய்). அவ்வளவும் நாட்டிலுள்ள (ஏழை) மக்களின் நலம் காக்க.

பத்தாயிரம் ரூபாயை தர்மம் செய்துவிட்டு பதினய்யாயிரம் ரூபாயிற்கு போஸ்ட் அடித்து ஒட்டுகிறவர்கள் வாழும்போது, தங்கள் சொத்துக்களையே பிறருக்காக வக்ஃப் செய்த ஜீவன்களும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய சீமான்தனம்.
வக்ஃப்
கைபரில் கிடைத்த நிலத்தை நான் என்ன செய்யட்டும் என்று உமர் ரலி, நபியிடம் கேட்டபோது, அதை நீங்களே வைத்துக் கொள்ளவும் செய்யலாம், அல்லது அதில் வரும் லாபத்தை வக்ஃபும் செய்யலாம் என்றபோது, உமர் அவர்கள் இரண்டாவது கருத்தை ஏற்றுக் கொண்டார்கள். இதுவே இஸ்லாத்தில் முதல் வக்ஃப் என்று சொல்லப்படுகிறது.
பிறகு, பல்வேறு சஹாபிகளும் தங்கள் சொத்துக்களை வக்ஃப் செய்திருக்கிறார்கள்.

அன்னை ஹப்ஃஸா (ரலி): தங்களுக்கு சொந்தமான நிலத்தை வக்ஃபு செய்து அதன் முத்தவல்லியாக அப்துல்லாஹிப்னு உமர் அவர்களை நியமனம் செய்தார்கள்.

உஸ்மான் ரலி: 35000க்கு வாங்கிய “ரூமா” கிணற்றை மக்களுக்காக வக்ஃபு செய்தார்கள்.

அலி ரலி: வருடத்திற்கு 40ஆயிரம் தீனார் வருமானம் தரக்கூடிய தரமான நிலத்தை வக்ஃபு செய்தார்கள். அதுமட்டுமல்ல, நல்ல ஊற்றுள்ள வேறொரு இடத்தை ஹீஸைன் ரலி அவர்களை பொறுப்புதாரியாக்கி அந்த நிலத்தை வக்ஃபு செய்திருந்தார்கள். பின்னொரு நாளில் முஆவியா ரலி, இரண்டு லட்சம் திர்ஹத்திற்கு அந்த இடத்தை ஹீஸைன் ரலி அவர்களிடம் கேட்டபோது, என் தந்தை நரகத்தை விட்டு பாதுகாப்புப் பெறவேண்டியும், அல்லாஹ்வை அஞ்சியும் இந்த இடத்தை வக்ஃபு செய்தார்கள். அப்படிப்பட்ட இடத்தை நான் விற்கமாட்டேன் என்றார்கள். (வக்ஃபு சொத்துக்களுக்கும், பள்ளிவாசல்களுக்கும் பொறுப்புதாரிகளாக இருப்பவர்கள், இப்படி பதில் சொல்ல வேண்டும்.)

ஸஃது ரலி: மூன்றாம் நாள், நாற்பதாம் நாள் பாத்திஹா என்று மார்க்கத்தில் இல்லாததையெல்லாம் தாயின் மரணத்திற்குப் பிறகு செய்து விட்டு, கடைசியில் கணக்குப் பார்க்கிற பிள்ளைகளாக இன்றைய தலைமுறைகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஸஃது ரலி தன் தாயிற்காக ஒரு தோட்டத்தையே வக்ஃபு செய்தார்கள்.

அப்துர்ரஹ்மானிப்னு அவ்ஃப் ரலி: முதலில் ஐநூறு ஒட்டகங்களை அல்லாஹ்வின் பாதையில் வக்ஃப் செய்தார்கள். பிறகு ஆயிரம் குதிரைகளை வக்ஃபு செய்தார்கள். பிறகு ஐம்பதாயிரம் மதிப்புள்ள நிலத்தையும், நாலு லட்சம் மதிப்புள்ள தோட்டத்தையும் வக்ஃபு செய்தார்கள்.

அனஸ், ஜீபைர்: பொதுவாகவே இருவர் இணைந்து வியாபாரம் செய்வதைப் பார்த்திருப்போம். ஆனால் மேற்சொன்ன இருவரும் தங்களுக்குப் பாத்தியப்பட்ட இடத்தை இணைந்தே வக்ஃபு செய்தார்கள்.

சட்டமேதை ஷாஃபிஈ: தங்களது தோழர்கள் ஹஜ்ஜீக்கு வந்தால் அவர்கள் இளைப்பாருவதற்காக அரஃபாவில் ஒரு இடத்தை வாங்கி வக்ஃபு செய்தார்கள்.
ஷாஃபிஈ கூறுவார்களாம், மக்கா, மதினாவில் விலைக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. காரணம், எதைக் கேட்டாலும் எதாவதொரு சஹாபியின் வக்ஃபு சொத்தாக இருக்கிறது.

அபகரிப்பு தண்டனைகள்:
வக்ஃபு வாரியத்தின் முன்னால் சேர்மேன் ஒருவர் இப்படிச் சொன்னார்: ஏறத்தாழ என்பதனாயிரம் கோடி ரூபாய் வக்ஃபுச் சொத்துக்கள் பெரும், பெரும் பணமுதலைகளிடம் மாட்டியிருக்கிறது என்றார்.

ஒருதடவை நபியவர்கள், சஹாபாக்களிடம், கியாமத் நாளில் ஒரு மனிதன் கழுத்தில் ஒட்டகத்தை தொங்கவிட்டு வருவான். அது கத்திக்கொண்டே இருக்கும். இவர்கள் உலகில் பிறரின் சொத்துக்களை அபகரித்தவர்கள். இதேபோன்று குதிரை, ஆடு இவைகளை சுமந்தும் என்னிடம் வருவார்கள். அப்போது நான், உங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது என்று அவர்களிடம் கூறிவிடுவேன். அந்த நிலையில் நீங்கள் வருவதை நான் விரும்பவில்லை என்றார்கள்.

கொடுப்பதெற்கென்றே பிறந்த சஹாபிகள் கோமாளிகள்!? கோமாளிகளாய் வாழும் பிண்டங்கள் இன்று கொடைவள்ளல்கள்!

சஹாபிகள் படைத்தவனுக்காகப் படைப்புகளுக்குக் கொடுத்தார்கள்,
சாமான்யர்கள் படைப்புகளுக்காகப் படைப்புகளுக்குக் கொடுக்கிறார்கள்.

ரஹ்மானே! கொடுத்து வாழ்வதில் இன்பம் கண்ட சஹாபிகளின் கூட்டத்தில் எங்கள் அனைவரையும் சேர்த்தருள்வாயாக! ஆமீன்.




























































Wednesday 30 April 2014

நெற்றி வியர்வை நிலத்தில் விழும் முன்......!


முதலாளிகள் உழைப்பாளர் நலனில் அக்கறை கொள்ளவும் உழைப்பாளர்கள் இஸ்லாம் வழங்கியிருக்கின்ற தங்களின் உரிமைகளை தெரிந்து கொள்ளவும் எழுதப்பட்ட ஆக்கம்
வருடத்திற்கொரு முறை மே 1 அன்று உலகம் முழுவதும் உழைப்பாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
அன்றைய தினத்தில் உழைப்பாளிகளின் கோரிக்கைகள், மாத ஊதியம், அவர்களின் அடிப்படைப்பிரச்னைகள், அவர்கள் சந்திக்கும் அவலங்கள், இன்னும் இவை போன்ற உழைப்பாளிகளைப் பற்றிய பல விஷயங்கள் உலகம் முழுவதும் பேசப்படும் அல்லது அலசப்படும்.
ஆனால் அன்றைய தினத்திற்கு முன்போ அல்லது பின்போ உழைப்பாளிகளை ஆளும் வர்க்கத்தினர் எவரும் , எந்த முதலாளிகளும் கண்டு கொள்வதேயில்லை.
உலகம் முழுவதும் உழைப்பாளர்களுக்காக உழைப்பாளிகள் பட்ட கஷ்டங்களும் அதற்கான சான்றுகளும்
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலோ 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலோ பல வளர்ச்சி அடைந்த நாடுகளில் உழைப்பாளிகள் முதலாளிகளால் மிக மோசமான முறைகளில் நடத்தப்பட்டனர்.எந்தளவிற்கெனில் நாளொன்றுக்கு 12முதல் 18 மணி நேரம் கட்டாயம் உழைத்தே ஆக வேண்டும் என்றொரு நிலை அன்றிருந்தது.
இக்கொடுமைக்கெதிராக பல நாடுகளில் ஆங்காங்கே எதிர்ப்புக் குரல்களும் கண்டனக்கனைகளும் தோன்ற ஆரம்பித்தன.
இங்கிலாந்தில்
‘உழைப்பாளிகள் நாளொன்றுக்கு 10 மணி நேரம் தான் வேலை செய்வார்கள்’ என்ற 6 அம்சக்கோரிக்கைகளில் இதை பிரதான கோரிக்கையாக வைத்து ‘சாசன இயக்கம்’ என்றொரு இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.
ஃபிரான்ஸில்
1830 களில் நெசவுத்தொழிலாளிகள் 15 மணி நேரம் வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர். இதை எதிர்த்து 1834 ஆம் ஆண்டு ‘ ஜனநாயகம்’ அல்லது மரணம் என்றொரு கோஷத்தை முன்வைத்து நெசவுத்தொழிலாளிகள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர் .
அமெரிக்காவில்
1832 ல் பொசுடனில் கப்பலில் பணியாற்றிக்கொண்டிருந்த தச்சுத்தொழிலாளிகள் 10 மணி நேர வேலை என்றொரு கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
1835ல் பிலடெல்பியாவிலும்,பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து உழைப்பாளிகளால் வேலை நிறுத்தம் செய்யப்பட்டது.
1877 ல் பென்சில்வேனியாவில் சுரங்கத்தொழிலாளிகளும், இரயில்வே தொழிலாளிகளும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
1886 ல் பல்வேறு மாநிலங்களில் தொழிலாளர் இயக்கங்களை ஒன்றினைத்து அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கம் 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டதோடு 1886 மே 1 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறை கூவல் விடுத்தது இதுவும் மே தினம் உருவாக முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில்
1856 ல் 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து மெல்போர்னில் கட்டிடத்தொழிலாளிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றனர்.
ரஷ்யாவில்
1895 க்கும் 1899க்கும் இடைப்பட்ட காலங்களில் பல நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் குறைவான நேரம் வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து நடைபெற்றன.
சிக்காக்கோவில்
1886 மே 3அன்று ஒரு பிரபலமான நிறுவனத்தின் வாசலில் 3000 க்கும் மேற்பட்ட உழைப்பாளிகள் கண்டனக்கூட்டம் நடத்திக்கொண்டிருக்கும்போது 4 தொழிலாளிகள் காவல் துறையினரால் சுடப்பட்டு பலியாயினர். இதைக் கண்டிக்கும் வகையில் மே4 அன்று ஏமார்க்கெட் சதுக்கத்தில் 2500 தொழிலாளிகள் கலந்து கொண்டு மாபெரும் கண்டனக்கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும்போது திடீரென்று கூட்டத்திற்குள் வெடிகுண்டு ஒன்று வீசப்பட்டதில் காவல்துறையினரில் ஒருவர் பலியாகவே, உடனே போலிஸார் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதோடு மட்டுமல்லாமல் தொழிலாளர் தலைவர்களை கைதுசெய்து வழக்கும் தொடுத்து 1886 மே21 அன்று 8 பேருக்கு தூக்குத்தண்டணையும் பெற்றுக்கொடுத்தனர்.
1887 ஆம் ஆண்டு அந்த 7பேரும் தூக்கிலிடப்பட்டனர் இவர்களின் இறுதி ஊர்வலத்தில் 5 இலட்சம் பேர் கலந்துகொண்டனர்.
8 மணி நேர வேலைக்கான போராட்டமும் சிக்காக்கோ தியாகிகளின் தியாகமும் தான் இன்று மே 1 அன்று உழைப்பவர் தினமாக வருடந்தோறும் அனுசரிக்கப்படுகிறது.
பாரீசில்
1889 ஜீலை 14 அன்று பாரீசில் 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் கலந்து கொண்டகூட்டத்தில் 8 மணி நேர வேலை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது எனவும் சிகாகோ சதியை இம்மாநாடு வன்மையாகக் கண்டிப்பதோடு 1890 மே 1 அன்றிலிருந்து அனைத்து நாடுகளிலும் தொழிலாளர் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது.
அன்றிலிருந்துதான் வருடந்தோரும் மே 1 அன்று உலகம் முழுவதிலும் உழைப்பாளர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இப்படி உலகம் முழுவதும் தொழிலாளர்களுக்காக பட்ட கஷ்டங்கள் இன்று வரை தீர்ந்தபாடில்லை. மிக கைசேதத்திற்குறிய விஷயம் என்னவெனில் இது நாள் வரை பல நிறுவனங்களிலும் தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் உழைப்பாளிகள் கொத்தடிமைகளாகவும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் மிகவும் பின்தங்கியவர்களாகவுமே நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் அவர்களின் அடிப்படைப்பிரச்னைகள் இன்றுவரை தீர்க்கப்படவில்லை அவர்கள் செல்லொணாத்துன்பங்களை சந்தித்து வருகின்றனர் சிறுவர்கள் உழைப்பாளிகளாக கொத்தடிமைகளாக நகத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் புத்தகங்களை சுமக்கிற வயதில் சுமைகளைத்தூக்குகின்ற அவல நிலை உழைப்பாளிகளுக்காக எப்படிப்பட்ட போராட்டங்கள் வேலை நிறுத்தங்கள் செய்யப்பட்டாலும் முதலாளிகளாலும் ஆளும் வர்க்கத்தினராலும் உழைப்பாளிகளுக்கு தீர்வுகள் கிடைக்கப் போவதில்லை.
இவர்களெல்லாம் போராடுவதற்கு 1434 ஆண்டுகளுக்கு முன்னாலே உழைப்பாளிகள் எதற்காக பாடுபட்டார்களோ அவை அனைத்தையும் இஸ்லாம் வழங்கிவிட்டது ஆக யுஇஸ்லாத்தால் மட்டுமே அவர்களின் அடிப்படைப் பிரச்னைகளை தீர்க்க முடியும் இஸ்லாம் என்ற கொள்கையால் மட்டுமே அவர்களின் வாழ்வாதாரப்பிரச்னைகளை களைய முடியும்.
இஸ்லாம் சோம்பேறித்தனத்தை முற்றிலுமாக ஒழித்து உழைப்பை வலியுறுத்துகிறது
பூமியில் பல இடங்களுக்கு பரவிச்சென்று பொருள் ஈட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வசனங்கள் குர்ஆனில் பல இடங்களில் காணப்படுகிறது.
அவற்றில் சில: ……

இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள், (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும் நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (கடலை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான்.16:14
(மானிடர்களே!) உங்கள் இறைவன் எப்படிப்பட்டவன் என்றால் அவனுடைய அருட்கொடைகளை நீங்கள் தேடி(ச் சம்பாதித்துக் கொள்ளும் பொருட்டுக் கப்பலை அவனே கடலில் செலுத்துகிறான், 17:66
(ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல் (அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது, 2:198
பின்னர் (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும் (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள், அன்றியும் நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லா ஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள 62:10
மேற்கூறப்பட்ட வசனங்கள் உழைப்பை வலியுறுத்தும் வசனங்கள்
மேலும் குர்ஆனிலும் நபிமொழிகளிலும் செலவழிக்கவும், ஜக்காத் ஸதக்கா வழங்கவும் செல்வத்தை சேமித்து வைத்துக்கொண்டு செலவழிக்காமல் கஞ்சத்தனம் செய்வோருக்கு கடும் தண்டனை உண்டு எனவும் கூறக்கூடியவைகள் உழைப்பை வலியுறுத்துபவையாகவே அமைந்திருக்கின்றன.
எல்லா இறைத்தூதர்களும் உழைத்திருக்கின்றார்கள்
தாவூத் நபியைக்குறித்து அல்லாஹ் கூறும்போது ‘…..நாம்; அவருக்கு (தாவூதுக்கு) இரும்பை மிருதுவாக்கித் தந்தோம் ‘வலுப்பமுள்ள போர்க்கவசங்கள் செய்வீராக! அவற்றின் கண்ணிகளை பலமுள்ளவையாக ஒழுங்கு படுத்திக் கொள்வீராக! நற்கருமங்கள் செய்வீராக! நீர் செய்பவற்றை உற்று நோக்குபவனாக இருக்கிறேன்’(என்றும் சொன்னோம்) 34:10,11.
இவ்வாறு குறிப்பிடுகிறான்.
அவர் போர்க்கவசங்கள் செய்யக்கூடியவராக இருந்தார் என்பதையே மேற்கூறப்பட்ட வசனம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.
முஹம்மது நபி(ஸல்)அவர்களும் உழைத்திருக்கிறார்கள் வியாபாரம் செய்திருக்கிறார்கள் நபி(ஸல்)அவர்கள் உட்பட எல்லா இறைத்தூதர்களும் ஆடு மேய்த்திருக்கின்றார்கள்.
உழைப்பதை வலியுறுத்தும் நபிமொழிகள்:
‘நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (‘மர்ருழ் ழஹ்ரான்’ என்னுமிடத்தில்)’அராக்’ (மிஸ்வாக்) மரத்தின் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அதில் கருப்பான பழத்தை நீங்கள் பறியுங்கள். ஏனெனில், அதுதான்அவற்றில் மிக நல்லது” என்று கூறினார்கள். மக்கள், ‘நீங்கள் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தீர்களா?’ என்று கேட்டனர். அதற்கு அவர்கள், ‘ஆடு மேய்க்காத இறைத்தூதர் எவரேனும் உண்டா?’ என்று பதிலளித்தார்கள். என்று ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவிக்கிறார்.
புகாரி: 3406, 5453.
”உங்களில் ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக்கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம் அல்லது மறுக்கவும் செய்யலாம். ”என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
புகாரி: 1470, 1471.
நபித்தோழர்கள் பலர் உழைத்து உண்பவர்களாக இருந்தனர். இதனால் அவர்களிடம் (வியர்வை) வாடை வீசும். இதன் காரணமாகவே ‘நீங்கள் குளிக்கக் கூடாதா?’ என்றுஅவர்களிடம் கூறப்பட்டது. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
புகாரி: 2071.
”ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும்உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்துஉண்பவர்களாகவே இருந்தனர். ”என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிக்தாம்(ரலி) அறிவித்தார்.
புகாரி: 2072, 2073.
உழைக்காமல் யாசகம் கேட்பதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது
” (தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூட சதை இல்லாதவனாக மறுமை நாளில் வருவான்… ‘யார் சுயமரியாதையைப் பேணிக் கொள்கிறானோ அவனை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச் செய்வான் யார் பிறரிடம் தேவையற்றவனாக இருக்கிறானோ அல்லாஹ் அவனைத் தேவையற்றவனாக ஆக்குகிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கிறானோ அவனை அல்லாஹ் பொறுமையாளனாக ஆக்குவான் மேலும், பொறுமையை விடச் சிறந்த, விசாலமானஅருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’.
புகாரி: 1474, 1475.
உழைப்பாளிகளை கண்ணியப்படுத்தி,அவர்களுக்கு இஸ்லாம் வழங்கும் உரிமைகளும் பணியாளரிடம் நபி(ஸல்)அவர்கள் நடந்து கொண்ட விதமும் நடக்கச்சொன்ன விதமும்
உங்களில் ஒருவரிடம் அவரின் பணியாள் அவரின் உணவைக்கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக் கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு ‘ஒரு பிடி அல்லது இருபிடிகள்’ அல்லது ‘ஒரு கவளம் அல்லது இரண்டு கவளங்கள்’ உணவு கொடுக்கட்டும். ஏனெனில், அவர் (அதை சமைத்தபோது) அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார். ‘ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புகாரி: 5460.
‘நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அரும்லுள்ள) ‘ரபதா’ என்ற இடத்தில்சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, ‘நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: ‘அபூ தர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர் களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்” என அபூதர் கூறினார்” என மஃரூர் கூறினார்.
புகாரி: 30.
”மூவருக்கெதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன்! என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன் சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன் கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன் (ஆகிய இவர்கள்தான் அந்த மூவர்)!’ என்று அல்லாஹ் கூறினான். என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புகாரி: 2270.
ஒரு மனிதர் நபி(ஸல்)அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் என்னுடைய பணியாளரிடம் அவர் (ஏதாவது தவறிழைத்துவிட்டால்) எத்தனை முறை மன்னிப்பை மேற்கொள்வது?என்று கேட்க நபியவர்கள் மௌனம் காத்தார்கள் பிறகு அம்மனிதர் மீண்டும் அதே போன்று கேட்க ஒவ்வொரு நாளும் எழுபது முறை மன்னிப்பை மேற்கொள்வீராக என்று நபியவர்கள் பதிலளித்தார்கள்.
திர்மிதீ: 1949.
(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரிடம் இருந்(து கொண்டிருந்)தார்கள். இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் ஒருவ(ரான நபியவர்களுடைய மற்றொரு துணைவியா)ர் உணவுப் பண்டமுள்ள தட்டு ஒன்றை (நபியவர்களுக்காகப் பணியாள் ஒருவரிடம்) கொடுத்தனுப் பினார்கள். (அப்போது) நபி(ஸல்) அவர்கள் எவருடைய வீட்டில் தங்கியிருந் தார்களோ அந்தத் துணைவியார் (ரோஷத்தில்) அந்தப் பணியாளரின் கையைத் தட்டிவிட்டார். அந்தத் தட்டு (கீழே விழுந்து) உடைந்துவிட்டது.உடனே (ஆத்திரப்படாமல்) நபி(ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டின் துண்டுகளை ஒன்று சேர்த்தார்கள். பிறகு தட்டிலிருந்த உணவை (மீண்டும்) அதிலேயே ஒன்று சேர்க்கலானார்கள். மேலும், (அங்கிருந்த தோழர்களை நோக்கி), ‘உங்கள் தாயார் ரோஷப்பட்டுவிட்டார்” என்று கூறினார்கள். பின்னர் அந்தப் பணியாளை (அங்கேயே) நிறுத்திவிட்டு தாமிருந்த வீட்டுக்கார (துணைவியா) ரிடமிருந்து மற்றொரு தட்டைக்கொண்டு வரச் செய்து, உடைபட்ட தட்டுக் குரியவரிடம் நல்ல தட்டை (மாற்றாக)க் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். உடைந்த தட்டை உடைக்கப்பட்ட வீட்டிலேயே வைத்துவிட்டார்கள்.அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
புகாரி: 5225.
நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன். (மனம் வேதனைப்படும்படி) என்னை ‘ச்சீ” என்றோ, ‘(இதை) ஏன் செய்தாய்” என்றோ, ‘நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா?’ என்றோ அவர்கள் சொன்னதில்லைஎன அனஸ்(ரலி) அறிவிக்கிறார்.
புகாரி: 6038.
……உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர் களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி: 30 .
அதே நேரத்தில் உழைப்பாளிகளும் தங்களின் உழைப்பில் அக்கறை செலுத்துவதோடு முதலாளிகளை ஏமாற்றாமல் விசுவாசமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
உழைத்து செலவழிப்பவரின் சிறப்புகள்
ஒரு மனிதன் (உழைத்துச்)செலவழிக்கிற தீனார்களில் சிறந்தது தன் குடும்பத்தாருக்கு செலவழிப்பதாகும் அடுத்து அல்லாஹ்வுடைய பாதையில் (தனக்கு போர் புரிய உதவும் ) வாகனத்திற்கும் அடுத்து அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியும் தன் தோழருக்கும் செலவழப்பதுமாகும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிம்: 2357.
‘ஒரு பெண் வீட்டிலுள்ள உணவை — வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும் அதுபோன்றே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்துவிட முடியாது’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
புகாரி: 1425.
”உயர்ந்த (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்ற வனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்.” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.
புகாரி: 1427.
நபி(ஸல்) அவர்கள் மிம்பர் மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகியவற்றைப் பற்றி உபதேசம் செய்துவிட்டு, ‘உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும் உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியதும் தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியது”என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அபூ ஹுரைரா(ரலி) இவ்வாறே அறிவித்தார்.
புகாரி: 1428
”ஒவ்வொரு நாளும் இரண்டு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், ‘அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குக் பிரதிபலனை அளித்திடுவாயாக!’ என்று கூறுவார். இன்னொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!” என்று கூறுவார். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புகாரி: 1442.
நல்ல சம்பாத்தியத்தின் வாயிலாக (ஈட்டிய வருமானத்திலிருந்து) ஒரு பேரீச்சம் பழத்திற்குச் சமமான அளவு தர்மம் செய்கிறவரிடமிருந்து அதை அல்லாஹ் தன் வலக் கரத்தால் பெற்று ஏற்றுக் கொள்வான். -அல்லாஹ்வை நோக்கி நல்ல (தூய்மையான)து மட்டுமே மேலே. செல்லும் – பிறகு அதை, உங்களில் ஒருவர் தம் குதிரைக் குட்டியை வளர்ப்பதைப் போன்று மலை அளவிற்கு அல்லாஹ் வளர்த்துப் பெருகச் செய்வான். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புகாரி: 7430.
ஒரு மனிதரின் வலுவையும் சுறுசுறுப்பையும் கண்ட நபித்தோழர்கள் (நபியிடம்) அல்லாஹ்வின் தூதரே இவர் அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவதில் ஈடுபட்டுக்கொண்டு) இருந்தால் நன்றாயிருக்கும் என்றார்கள். அதற்கு நபியவர்கள் இவர் தனது சிறு பிள்ளைகளுக்காக உழைக்கப் புறப்பட்டுச் சென்றால் அல்லாஹ்வின் பாதையில் தான் இருக்கிறார். வயதான பெற்றோருக்காக உழைக்கப் புறப்பட்டுச் சென்றால் அல்லாஹ்வின் பாதையில் தான் இருக்கிறார்.தான் சுயமரியாதையுடன் வாழ்வதற்காக உழைக்கப் புறப்பட்டுச் சென்றால் அல்லாஹ்வின் பாதையில் தான் இருக்கிறார். முகஸ்துதிக்காகவும் பெருமையடித்துக்கொள்வதற்காகவும் புறப்பட்டுச் சென்றால் அவர் ஷைத்தானின் பாதையில் தான் இருப்பார்; என்று கூறினார்கள்;.
நூல் தப்ரானி: 15619.
அர்ஷின் நிழல்
தன்னுடைய நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தன்னுடைய நிழலில் அல்லாஹ் ஏழு (வகையினருக்கு) பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான்……. அவர்களில் ஒருவன் தன்னுடைய இடக்கரத்துக்குத் தெரியாமல் வலக் கரத்தால் இரகசியமாக தர்மம் செய்பவன்…… என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி: 1423.
மேற்கூறப்பட்ட அனைத்து பொன்மொழிகளும் உழைப்பாளிகளுக்காகவே சொல்லப்பட்டவை
இப்படி உழைப்பாளிகளை கண்ணியப்படுத்தி அவர்களை கௌரவப்படுத்தி அவர்களின் அடிப்படைப் பிரச்னைகளை முளையிலேயே கிள்ளி எறிந்து அவர் களின் உரிமைகளை 1400 ஆண்டுகளுக்கு முன்னாலேயே இஸ்லாம் வழங்கி யிருக்கிறதென்றால் அது மிகையல்ல எனவே உழைப்பாளிகளை கண்ணியப் படுத்துவோம் அவர்களின் உரிமைகளை வழங்கிடுவோம் அல்லாஹ்வின் அருளைப்பெற்றிடுவோம் உழைப்பாளிகளும் தங்களின் கடமைகளையும் பண்pகளையும் உணர்ந்து தங்களின் முதலாளிகளுக்கு நஷ்டம் ஏற்படுத்தாமல் தங்களின் இறைவனுக்கு பயந்து செயல்படவேண்டும் அல்லாஹ் எல்லோருக்கும் நல்லருள் புரிவானாக ஆமீன்.

நன்றி: இஸ்லாம் கல்வி